தமிழகத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் பெய்யாத அளவுக்கு கன மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார்.
அவருடன் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சென்றுள்ளார். ஹெலிகாப்டர் மூலமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை மோடி நேரடையாக பார்வையிட்டு சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அதற்கு முன்னர் அடையாறு விமான தளத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவர் சந்தித்து வெள்ளச் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, தமிழகத்துக்கு உடனடியாக ரூ.1000 கோடி நிவாரண நிதி ஒதுக்கப்படுவதாக மோடி அறிவித்தார்.
முன்னதாக சென்னை விமான நிலையம் குளம் போல காட்சி அளிப்பதால், புது தில்லியில் இருந்து தனி விமானத்தில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அரக்கோணத்தில் உள்ள ராஜாளி விமான தளத்தில் வந்திறங்கினார்.
அவரை, தமிழக உயர் அதிகாரிகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும் வரவேற்றனர்.
அரக்கோணத்துக்கு தனி விமானம் மூலம் வந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு வந்தார்.